Sunday, July 21, 2013

இனிய ஞாயிறு

இன்னும் கொஞ்சம் உறக்கம்.
இன்னும் கொஞ்சம் முகநூல் ...
இன்னும் கொஞ்சம் நல்ல சமையல்..
இன்னும் கொஞ்சம் இறை வேண்டல்...

இன்னும் கொஞ்சம் ஒய்வு...
இன்னும் கொஞ்சம் சிரிப்பு ..
இன்னும் கொஞ்சம் இசை..

நாளை ஊறும் புது உணர்வில்
நகர்ந்து விடும் ஒரு வாரம் !

இலக்குகள் இல்லா
இனிய ஞாயிறு வாய்க்கட்டும் .



இறுக்கும் தளைகள்
சற்றே நழுவட்டும்...

இனிய உறக்கம்
இமைகள் தழுவட்டும்..

உழைப்பின் களைப்பு
உடல்தான் மறக்கட்டும்

உணர்வில், உயிரில்- புது
உற்சாகம் பிறக்கட்டும்.

சிறு சிறு மகிழ்வில்
நெகிழும் மழலை போல்
கவலைகள் தொலைத்த
ஞாயிறு
களிப்புடன் சிறக்கட்டும்...!

இனிய காலை வணக்கம்.

கழுவில் ..!

சாதி தனை சாகடித்து
சாதிக்க வேண்டியவர்
பாதியிலே போனதென்ன ?

சந்திக்கு வந்த வழக்கு
முடிவறியாது
சடுதியில் போனதென்ன ?

அழகான வாழ்விருக்கு
அனுபவிக்காது
இங்கு
அழவைத்துப் போனதென்ன?

இன்னும் எத்தனை
இளவரசர்களை
கழுவில் ஏற்றப் போகிறோம்?

மடிக் கணினி

இடைவிடாமல் 
சிணுங்கும் குழவி..
எடுத்தணைக்க நீண்ட கரங்கள்...

கொஞ்ச நேரம் 
கொஞ்சுகையில்
கொதிக்க துவங்கியது அடிமடி..!

# மடிக் கணினி

உறைந்த கணங்கள்..

அற்புதங்களின் கருவூலம்
அன்பும், மகிழ்வும் ததும்பும் 
அழகிய தருணங்கள்....
சுமக்கும் புகைப்படங்கள் 

உறைந்த கணங்கள்
உயிர் பெறுகையில்
கவிதையாய் மனதில் நிறையும்..
கதைகள் நூறு சொல்லும் ..

நினைவைக் கலைக்கும்,
விழிகளில் நீர் சுரக்கும்.

வளர்ந்தபின் மறந்த
மழலைச் சிரிப்பை
மறுபடி திருப்பித் தரும்.

உறவின் மேன்மையை
உரத்துச் சொல்லும் !

ஒரு ஆயிரம் இருக்குமா ?
இருக்கலாம்..

எங்கள்
வாழ்வின் பயணத்தினை
படங்களாய் பதிவு செய்து
பத்திரப் படுத்தயுள்ளோம்
மக்களின் மக்களும் ரசிக்க..!