Monday, March 25, 2013

இந்த நாள் இனிய நாள் 

சிலு சிலு காலையில் சுகமான நடை கணவருடன் .
பாதி ,பேச்சு மீதி சிந்தனை !!
பிடித்தப் பாடல்கள் பின்னணியில் சமையல். 

அழுத்தமில்லா நாளாய் அமைந்தது விட்டது இன்று.!!

தகிக்கும் வெயிலில்
ஆய்வு முடித்து அலுவலகம்
திரும்புகையில்
அலைபேசி அழைக்க "இவர்"

"சாப்டாச்சா? "
"இன்னும் இல்லை .
வெளியே சென்று திரும்புகிறேன் " நான்
" சீக்கிரம் , இன்னிக்கு சாப்பாடு சூப்பர் "

அலுவலகம் வந்து சாப்பிட்டு பார்த்தேன்.
வழக்கம் போல சுமார்தான்.!!!!!

ஆண்டாண்டாய் தொடரும்
அழகான பொய்களால் ஆன வாழ்க்கை ...

இந்த நாள் இனிய நாள்...!!!!

Sunday, March 17, 2013

மின்னி ஒளிரும் வெள்ளிப் பூக்கள் - தாமதமான பதிவு.




மின்னி   ஒளிரும்  வெள்ளிப்   பூக்கள்    !!


  வீட்டில் அலமாரிகளை சுத்தம் செய்யமுற்படுகையில் ,  என் கை பட்டு ஒரு சின்ன பெட்டி தரையில் விழ ,  அதிலிருந்து  சிதறின குட்டி குட்டியாய் வெள்ளிப் பூக்கள். அழகான சாடின் துணியால் செய்யப்பட்டு ,  அதில் தொங்கிற ' போ' போன்ற ரிப்பனும் ,   சட்டையில் குத்தி கொள்ள வசதியாய்  பின்னும் பொருத்தப்பட்ட பேடஜ்  போன்ற அந்த பூக்கள்  சிந்தனையை இரண்டு ஆண்டுகளுக்கு முன்  செல்ல  வைத்தது. 

 அந்த வெள்ளிப் பூக்கள் நினைவூட்டியவை எங்கள் திருமணத்தின் வெள்ளி விழா பற்றிய  நிகழ்வுகளை. ! இதுவரை இது பற்றி நான் பகிரவில்லையே என்ற வருத்தம் தோன்ற , இதோ  ஆரம்பித்து விட்டேன்.

  எங்கள் இருவரின் திருமணம் 1985, ஆகஸ்டில் நடந்தது..எங்கள்  திருமண வெள்ளி விழா  2010 ல் .!!   . இது பற்றி பிள்ளைகள்  2010 துவக்கத்தில் இருந்தே பேச ஆரம்பித்தார்கள். !  நானும் , கணவரும் ,  இந்த பேச்சு வரும் போதெல்லாம்  சற்றே எளிமையாய் செய்யலாம் என்றே சொல்லி வந்தோம். எங்கள் திருமணமே , மிக எளிமையாய் , நிகழ்ந்த ஒன்று. 

  ஒவ்வொரு முறை இது பற்றி  பேசும் போது , நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றே இருவரும் சொல்வார்கள்.  நாங்கள் , உறவினர்கள் , நெருங்கிய நன்பர்களுக்கு ஒரு டின்னர் அல்லது லஞ்ச  செய்யலாம் என கருதினோம்.. 

      ஆனால் , இந்த செய்தி  என் பிள்ளைகள் வழி உறவினர்களுக்கும் சென்று , அந்த நாளை , ஒரு பெரிய கொண்டாட்டமாகவே  மாற்றி விட்டனர். 

      எங்கள் வீடு மாடியில் அடிக்கடி ஆலோசனைக் கூட்டங்கள் நடக்கும் . அப்போது தவறி கூட , நாங்கள்  அந்த பக்கம் போய் விட கூடாது என். கடைசி வரை ஏற்பாடுகளை ரகசியமாய்  வைத்தனர்.  எங்கள் பிள்ளைகள் மட்டும் அல்ல ,  எங்கள் உடன் பிறப்புகளின் பிள்ளைகளும் அந்த கூட்டத்தில் கலக்க ஆரம்பித்த   போது  தான்  , எங்கள் கவனம் அதில் திரும்பியது. 

    " பணம் மட்டும் கொடுங்கள் , மற்றது எங்கள் பொறுப்பு" என்ற போது  நிஜமாக கவலைப் பட ஆரம்பித்தோம் . இவர்கள் என்ன செய்ய போகிறார்களோ  என்று .

         முதலில் வீட்டுக்கு வந்தது அழைப்பிதழ். !  வெள்ளி நிறத்தில் , சிறிய , அழகிய கார்டு.  அழைத்தவர்கள்  எல்லா  பிள்ளைகளும்  ( மொத்தம்  27 பேர்) 28 வயது  துவங்கி கடைசி அழைப்பாளரின்  வயது ஒன்று.   அவர்கள் அத்தனைப் பேரின் பெயரும் அதில் அச்சடிக்க வைத்திருந்தனர்.     அழைப்பிதழ்  நெருங்கிய நன்பர்களுக்கும் ,   முக்கிய உறவினர்களுக்கும்  தரப்பட்டன . வேலூர் " Darling  residency " ஓட்டல்  ஹாலில் நிகழ்த்த ஏற்பாடு. .

         நாள் நெருங்க , நெருங்க நடக்கிற ஏற்பாடுகளை பார்த்தால் , பட்ஜெட் குறித்து  சிறிது கவலையும் ஏற்பட்டது. மெனு முதற் கொண்டு எல்லாமே அவர்களே  முடிவ்டுத்தார்கள் . 
             சென்னை உறவினர் , சகோதரிகளின் மருமகன்கள் , மகள்கள் சம்பந்தி , என முதல் நாள் 20 ஆம் தேதியே சிலர் வந்து விட்டனர். வீடு களை  கட்டி விட்டது. இரவு 12 மணிக்கு எங்கள்  படுக்கை அறை  கதவு தட்டப்பட , வெளியே  வந்தால் , அந்த நேரத்தில் , ஒரு பெரிய கேக்கை கொண்டு வந்து வெட்ட வைத்தனர். ஒரு பார்சல் பிரிக்க வைத்தனர். அதில் 25ஆண்டுகளுக்கு  முன் நாங்கள் அலுவலகம் செல்ல தயாரான நிலையில் எடுக்கப் பட்ட புகைபடம்  அழகாக பிரேம்  செய்து ,   பரிசாய் அளித்தனர்.(புகைப்படம்  பார்க்க ..)

       21 ஆம் தேதி அழகாய் விடிய , காலை  சர்ச்சில் ஸ்பெஷல் சர்வீஸ் எங்களுக்காக. கடவுள் ஆசியுடன் !  அங்கே  வந்தவர்களும் கை குலுக்க ,   இனிப்பு தந்து . வெளி வந்தோம். அன்ற மாலைதான் விழா. எல்லா உறவினர்களும்  வீட்டுக்கு வந்து விட்டனர். 

      மாலையில் அனைவரும் ஓட்டலுக்கு சென்று விட, சரியான நேரத்தில்  அலங்கரிக்கப் பட்ட   எங்கள் கார்  எங்களை சுமந்து , ஓட்டலுக்கு சென்றது. 
     ஓட்டல் வாயில் ஆரத்தி. உடன் என் தங்கை மகள் , முதலில் நான் சொன்ன அந்த வெள்ளிப் பூவை எங்களுக்கு பின் செய்து விட்டாள் .  ஹாலுக்குள் நுழிய முற்படுகையில் , கதவு  உட்புறம் அடைக்கப் பட்டு  இருந்தது. திறக்கப்பட்டு உள்ளே செல்ல அனுமதி தந்தனர். நுழைகையில் இருவர் மேலும் பூக்களை  சொரிந்தனர்.

       நிகழ்ச்சி துவங்கியது. இறை வாழ்த்துப் பாடல்  தங்கை மகள் பிரிசில்லா பாடினாள் ( அப்போது அவள் வயது 8). சிறய ஜெபம்  . முடிந்ததும். என் மகள்  தொகுப்புரை வழங்க துவங்கியது. மகன் பிரசன்னா வரவேற்புரை  ஆங்கிலத்தில் எழுதி வைத்து கொண்டு  படித்தான். எங்களை  மாலை மாற்ற வைத்தனர். மீண்டும் ஒரு கேக் வெட்டினோம். நண்பர்கள்  அன்று மழையை  பொருட்படுத்தாமல்  வந்திருந்தனர். 

     எங்கள்  ( சகோதரியின் ) மருமகன் ராஜ்குமார் தானே  எழுதி வந்த கவிதையை படித்தி வாழ்த்தினார். மகன் சந்தோஷ் தானும் ஒரு கவிதை படிப்பதாகச் சொல்லி படித்தார். திடுக்கிட்டு போனேன் . ஏனெனில் , அது நான் என் நோட்டு புத்தகத்தில் எழுதி வைத்த கவிதை தான். என் மாமா சுகுமாரன் , வாழ்த்த வந்து எங்களை கண்  கலங்க வைத்தார்.  பின் வந்த சம்பந்தி திரு . சத்திய மூர்த்தி மேலும் பேசி  நெகிழ வைத்தார். 

      அதன் பின் நடந்தது தான் மிக அற்புதமான நிகழ்வு. எங்கள் குடும்ப புகைப் படங்களை , பழைய  படங்கள் ,உறவினர்களின் திருமண புகைப் படங்கள் ,  என எல்லாவற்றையும் மின் திரையில் " DOWN  THE  MEMORY LANE " என்ற தலைப்பில் PRESENTATION கொடுத்தனர். மிக அபூர்வ படங்கள் சிலவற்றை எப்படி COLLECT   செய்தனர் என்றே தெரியவில்லை. 

ஒரு மெகா வாழ்த்து  மடலில் , எல்லோரின் வாழ்த்தையும் , கை ஒப்பமிட்டு தந்தனர். ஒரு வயது தீபு கூட கை பிடித்து கை எழுத்து போட்டிருந்தது.  பார்க்கும் போதே எங்கள் இருவரின் கண்களும் நிரம்பி விட்டன. 

     பின் அங்கு வந்த ஜோடிகளுக்கு போட்டி வைத்து , எங்களை பரிசு கொடுக்க செய்தனர்.BUFFET  உணவுடன்  நிறைவு செய்தனர். நடுவே , அயல் நாட்டில் இருக்கும் உறவினர்கள் , நண்பர்கள் பேசி  கொண்டே இருந்தது.  திருபி வருகையில் காரில் பாடிய "  ஆனந்தம் விளையாடும் வீடு " அன்று  புதிதாக அனுபவித்தோம்.

      மனதை நெகிழ வைக்கும் வகையில் உடன் பிறந்தோரும் , பிள்ளைகளும் உறவினர்களும் எங்கள் திருமண வெள்ளி விழாவை நிறைவு செய்தனர்.   கைமாறாக அன்பை தவிர ,  திருப்பி தர   வேறு என்ன இருக்கிறது. 

இருவேறு மதம் , இனம் . இருந்தும் எங்கள் மண  வாழ்வு நிறைவாக இருக்கிறதென்றால் அதன் முழு  பொறுப்பும் என் கணவருக்கே. 

      வாழ்வே ஒரு வரம் எனில், வாழ்க்கை ஒரு கொண்டாட்டம் தான். இந்த வெள்ளி விழா கொண்டாட்டங்கள் அதைத்தான் எங்களுக்கு எடுத்து சொன்னது.. 


ஆனால் எத்தனை பேருக்கு இது அமையும்.?  
எங்களுக்கு நடந்தது 

                                       " யார்க்கிது வாய்க்கும்?"

  









              



















Thursday, March 14, 2013

நிழலாடும் நினைவுகள் ...

Subha Sivanandham

நிழலாடும்   நினைவுகள்  ...


மகள் திருமணம் முடிந்து சென்ற பிறகு , வீட்டில் ஒரு வெற்றிடமும் , தனிமையும் உருவாக்கி  விட்டது.  இருவருக்கென  சமைப்பது ஒரு துயரச் செயலாக  மாறி விட்டது.  

மகன் , வாரக் கடைசியில் வந்து , "என்ன சமையல் இது "என்று  மல்லுக்கு நிற்கும் போது  தான் , வாழ்க்கை ருசிக்கிறது. 

       திடீர்  என ஒரு வெறுமைச் சூழ , இது வரை கடந்த வாழ்க்கைப் பயணம் 
கண்  முன் நிழலாடு கிறது.  குறிப்பாக  , இவர்கள் குழந்தைகளாய்  இருந்த  போது  நடந்த சம்பவங்கள் சில , 

          நாம் இவர்களுக்கு  பல விவரங்களை  கற்பித்து இருந்தாலும் , இவர்களே ஆசிரியராய் மாறி நமக்கு  வாழ்க்கையை கற்று தந்த நிகழ்வுகளை இங்கு  பதிவிடலாம் என நினைக்கறேன்.

        என் மகளுக்கு எட்டு வயதிருக்கும். கணவர்  பதவிவுயர்வு  பெற்று மும்பை சென்று விட்டார். நானும் மகளும் , கொஞ்சம் தொலை வில் இருக்கும்  சர்ச்சுக்கு   2 வீலரில் செல்வோம். பக்கத்தில் உள்ள  உயர் நிலைப் பள்ளி விடுதி  மாணவரும் அங்கே ஞாயிறு  காலை  வருவார்கள். 

ஒரு நாள்  என்னிடம் அவள் கேட்ட கேள்வியில் திகைத்துப் போனேன். 

" ஏன்  இந்த  அண்ணாக்கள் , நிறைய பேர் செருப்பு இல்லாமல் வருகிறார்கள் ? "

"  அவர்கள் வீட்டில் வாங்கி தர வசதி இல்லாமல் இருக்கலாம்" இது நான்.
ஏனெனி ல் அது  வசதியற்ற மாணர்வருக்கு இலவச கல்வி தரும் விடுதி.

உடனே அவள் , :" நாம் ஏ ன்  வாங்கி தரக் கூடாது ?? எவ்வளவு  ஆகும் " என்றாள். 

"  நிறைய செலவாகும் . நம்மால் முடியாது' என்றேன்  

அவள் விட்டு விடவில்லை 

 " அட்லீஸ்ட் ஒருத்தருக்கு கூடவா நம்மால் வாங்கித் தர முடியாது.? " அவள் விடுவதாய்  இல்லை.

" பார்க்கலாம்"

" இல்லை மம்மி , எனக்கு இந்த கிறிஸ்மஸ் க்கு புது பிராக் வேண்டாம். அதற்கு ஒருத்தருக்கு செருப்பு வாங்கி தரலாம் இல்லே" 

 கொஞ்சம் அசந்துப் போனேன் .

ஆனால் அவள் சொன்னதை நிறைவேற்றினேன். . ஒருசோடி  செருப்புக்கான 
தொகையை  விடுதி காப்ப்பளரிடம்  தந்து விவரம் சொன்னேன். 

கிறிஸ்மஸ் க்கு புது பிராக் வேண்டாம் என்ற பெண்  அதை அப்படியே கடை பிடித்தாள் . தினமும் அதை எனக்கு நினைவுருத்துவாள்." இந்த வருடம் எனக்கு புது பிராக்  வேண்டாம் . அது தான் , அந்த காசுக்கு செருப்பு வாங்கி தந்தோம் " என்பாள்.

ஆனால் ,  பண்டிகைக்கு  அவர் மும்பைலிருந்து , புது சட்டையுடன் வந்த     போது அதை மறுத்து விட்டாள் .  மிகவும் கட்டாயப் படுத்தி  அவளை உடுத்த வைத்தேன். 

இது போல் நிறைய சம்பவங்கள் .  சொல்லிக் கொண்டே போகலாம் .

நல்ல மதிப்பெண் பெற்று , பொறியியல் படிக்க , அண்ணா யூனிவேர்சிட்டி கிடைத்தும் , மருத்துவம் படிக்க ஒற்றைக் காலில் நின்றாள் . பொறியியல் வாய்ப்புகளை பற்றி சொல்லி கட்டாயப் படுத்திய போது இந்தியாவின் , ஏழைகளுக்கான மருத்துவம்   பற்றிய புள்ளி விவரங்களைச்  சொல்லி சம்மதிக்க  வைத்தாள் . படித்தும் முடித்தாள் .

நல்ல உயர்ந்த எண்ணங்களை வளர்த்து கொண்ட அவள் எந்த காரணத்தாலும் தன்  குணத்தை மாற்றிக் கொள்ளக் கூடாது என்பதே என் விருப்பம். 


நாம் தாம் பிள்ளைகளை நடத்துவதாய் நினைக்கிறோம். ஆனால் , குழந்தைகள் 
நமக்கு கற்று தருபவை ஏராளம் .

              மகனை பற்றியும் பகிர வேண்டும்  , இன்னொரு பதிவில் ....



Friday, March 8, 2013



மகளிர் தினம் 8-3-2013 ல் வாசித்த கவிதை.!

வருடம்  ஒருநாள்
வந்துப்  போகும்
விடுதலைத்  திருநாள் போல் 
நமக்கெல்லாம்  ஒருநாள் 

நமக்கே  நமக்கான திருநாள் 
மகளிர் தினம்.

உ வப்பான நிகழ்வாக 
உரிமையுடன்  கை கோர்த்து 
இனிப்பும் , பட்டும் 
இசையும்  கவிதையும் 
என்று இணைந்து  மகிழும் 
மகளிர் தினம்.

ஆனால் 
உலராத கண்ணீருடன் 
உயிர்  உறையும்  சம்பவங்கள்.
கனத்த இதயங்களை 
கலங்க அடிக்கும்   நினைவுகள்.

புண்ணிய நதிகள் 
புறப்படும் தேசத்தில் 
பெண்மைக்கு நேரிடும் 
பேரிடர் துயர்கள்  எல்லாம்
எண்ணிப்  பார்க்கையில் 
திண்ணிய நெஞ்சம் கூட 
திகைத்து  தவிக்கும்.

பின்னிரவில் 
தலைநகரில் 
வன்புணர்ச்சி செய்யப் பட்டு 
அம்மனமாய்  வீசப்பட்ட 
பெண் மகளை 
நினைக்கையில் 
பெண் பெற்ற  வயிறுகளில் 
பற்றிக் கொண்டது  பெருந் தீ .!

அழகிய முகங்களை 
அமிலத்தில் கரைத்து 
அவர் தம் உடலை 
நிலத்தில் புதைத்து 
எந்த பசியைத 
தீர்த்து கொண்டது இந்த தேசம்.?

பால் மணம்  மாறா 
பள்ளி சிறுமிகள் 
பாலியல் கொடுமையில் 
பாழ் பட்டு 
உயிர்விட 
அவர் எழுப்பிய 
அலறலில் 
படுக்கையினின்று 
திடுக்கிட்டு எழுந்து 
உறக்கம் தொலைத்த 
துன்பம் எப்படி  சொல்வேன்?

நேசத்துக்குரிய 
என் தேசத்தில் 
ஊருக்கொருவராய்  வீற்றிருக்கும் 
பெண் தெய்வங்கள்  எல்லாம் 
ஊமையாய்  போனதென்ன? 

போருக்காய் சேமித்த 
ஆயதங்கள் எல்லாம் 
பேருக்காய்  இருப்பதென்ன? 

ஆயிரம் சொல்லி 
ஆற்றினாலும் 
ஆறாத ரணம் இது.
நெஞ்சில் தீராத 
சோகம் இது.!

என்ன காரணம்? 
வன்முறை தினம் 
வளருதே 
என்ன காரணம்?

மாறி வரும்  வாழ்க்கை  முறை?
மலிந்துப் போன மதிப்பீடுகள் ?
நம் வளர்ப்பு முறையா? 
திரையா ? ஊடகமா? 

சிறுபொறி  ஊரை அழிக்கும் 
திருவிளக்கு  இருளை  விலக்கும்.

வன்முறை தீயை 
ஒன்றாய் அணைப்போம் 
இருளை விரட்டும் 
திரு விளக்காய்  ஒளிர்வோம்..