Tuesday, April 23, 2013

உலக புத்தக தின வாழ்த்துக்கள்.



புத்தாண்டு ,
பிறந்த நாள்
நாள் எதுவாயினும்
என்  பரிசு புத்தகம் ..!!
வயதிற்கும் வகுப்பிற்கும் ஏற்றதாய் ....
வாழ்க்கையை  கற்று தர
இல்லம் நிறைக்கும் வண்ண மலர் களஞ்சியம் .!
கணினி வீட்டில் நுழைந்த நாள் முதல்
 தன்  புன்னகையை மறந்தன
என் வீட்டுப் புத்தககங்கள் !!
மகன்  கேட்டான் :
" யாரும்  படிப்பதில்லை ...
 பின் எதற்கு  செலவு "

" உன் மகன் படிக்க  கூடும் " என்றேன்.
எல்லா பிள்ளைகளுக்கும்....
உலக புத்தக தின வாழ்த்துக்கள்

Sunday, April 21, 2013

நிழலாடும் நிஜங்கள் (2)

       
புகைப் படம்  காட்டுவது என் மகன் பிரசன்னா ....

குழந்தைப் பருவம் முதற்   கொண்டு  இப்போது வரை.. மகனின் பல முகங்கள்
இந்த முகத்தின் பின் இருக்கும் அழகான உள்ளத்தை பற்றி தான் இப்போது..


என் வாழ்க்கை தந்த கொடைகளில் , மிக முக்கிய கொடையாக என் மகனை கருதுகிறேன்.

.சில  நிகழ்வுகள் .....

10ஆம்  வகுப்பு என்று நினைக்கறேன். வரும் போதே மிக சோகத்துடன் வந்தான். என்னாச்சு என்று விசாரித்தால் , உடன் படிக்கும் நண்பனுக்கு  தலையில் ட்யுமர்  . ஆப்பரேஷன் செய்யனும் , நிறைய செலவாகும் என்கிறார்கள் . ஸ்கூலில் , fund raise செய்கிறார்கள் என்றான். அவன் அப்பாவிடம்  "எவ்வளவு  அப்பா தருவீங்க "என்றான். அவர் ஒரு தொகை சொன்னதும் உடனே முகம் மலர்ந்து  போனதை கவனித்தேன்..
நான் " அப்பா தருவது இருக்கட்டும். நீயும் உன்  பங்குக்கு ஏதாவது செய்யப் பாரு ' என்றேன்.

காலை அவர் அப்பா பணம் தந்தபோது , " அம்மா , என் உண்டியலை  தரப் போறேன் " என்று அதை காட்டி விட்டுச் சென்றான். கிரிக்கெட் கிட வாங்க பல நாட்களாய் சேமித்து வந்தான்.

மாலை வந்ததும் , " அம்மா மிஸ் உண்டியலை உடைத்து என்னையும் எண்ண சொல்லி இதையும் சேர்த்துக் கிட்டாங்க    " என்று மலர்ந்து சொன்னான்.
கை கொடுத்தேன். .தனக்கென சேர்த்து  வைத்ததை , அப்படியே எடுத்து தரும் நல்ல மனம்  !   நினைவுக்கு வருகிறதா பிரசன்னா ??

ஒருமுறை , வழியில்பெரிய  விபத்தை  பார்த்து விட்டு 108க்கு தகவல் தந்து , வண்டி வந்ததும் , யாரும் துணைக்கு வராததை  கண்டு , தானே உடன் சென்று
சிகிச்சைக்கு சேர்த்து , அடிபட்டவர் வீட்டில் இருந்தது வந்த பின் ஒப்படைத்து விட்டு , நள்ளிரவை  தாண்டி , இரத்தக் கறை யுடன் வீடு திரும்பினான்..  உதவிக் கரம் நீட்டும் வாய்ப்புகளை பிள்ளைகள் தவற விடுவதில்லை.


இன்னொரு நிகழ்ச்சி , என்னை நெகிழ வைத்தது.என்னிடம் விவரித்தது ..

" ஒரு  தாத்தா ,  பசிக்குது என்றார் மா.  ..பார்க்க பாவமாய் இருந்தது.நானே ஓட்டலுக்கு கூட்டினு போய் , என்ன வேணும்னாலும் சாப்பிடுங்க , எவ்வள்வு வேணும்னாலும் என்றேன்.

"  அப்புறம்  என்னச்சு ?"

"கொஞ்சம் தான் சாப்பிட்டார். போதும்டார்.. போகும்  போது , என் தலை மேல் கை வைத்து " நல்லாயிருப்பா 'னார் "

எனக்கே கொஞ்சம் கலங்கி விட்டது...!

திடீர்னு நிறைய பூ வாங்கி வருவான். "இப்போ விலை அதிகமாச்சே ..:" என்றால் , "ஸ்கூல் போகிற பையன் மா. சீக்கிரம் வித்துட்டு EXAM க்கு படிக்கணும் னான் " "இருக்கிறதை அப்படியே வாங்கிட்டு வந்தேன் "என்பான்.

  யாரையும் கஷ்டப படுத்தக் கூடாது என்று மட்டும் அல்ல , யாரைப் பற்றியும் அவர்கள் இல்லாத தருணத்தில் , பேசவும் அனுமதிக்க  மாட்டான்..

நண்பர்களுக்கு நிறைய முக்கியத்துவம் தரும் , அவன் என்மிகச்  சிறந்த நண்பன்!

"வியாழக் கிழமை அம்மா ..." என்று  சட்டைக்குள்  மறைத்து வைத்த விகடனை தந்து  விட்டு ,   என் முகம் பிரகாசம் அடைவதை அனுபவிப்பான்.சின்ன சின்ன செயல்களால்  மகிழ்ச்சியில் ஆழ்த்துவான்

நிறைய பதியலாம் .. எங்கே போகப் போகிறோம். .. மீண்டும் அவனைப் பற்றிய  சில செய்திகளுடன் வருவேன்.