Tuesday, September 27, 2011

AZHAGIYA THARUNANGAL( MUDHAL PARISU 5/5/97)




காலங்காலமாய் அழகைச் சுவைத்து 
கவிதைகளாய் சேர்த்து வைத்து 
அழகியவை வளர்த்த தேசமிது 
ஆனால்
மாறிவிட்ட உலகந்தன்னில் 
பொருள் தேடுகின்ற இயந்திரமாய் 
மனிதன் மாறியுள்ள நேரமிது.

அழகிய பூக்களை 
ஆசையாய் 
தொடுத்து அணிந்தாள் 
என் தாய் -
பாகங்களை அறிய -அதைக் 
கிழித்துக் கற்கிறாள் என் மகள். 

அழகியவை மறந்து, மறந்து
அறிவியலில் ஆழ்ந்துப் போனோம் .
பட்டியல்லிட்டுப் பார்க்கிறேன் 
வாழ்வில் 
பரவசம் சேர்க்கும் தருணங்களை!

மரணவாயிலில் மீண்ட தாய்
மலராக பூத்துள்ள மகளின் 
அழுகைக் குரலில் 
வலி மறந்துச் சிரிக்கும் தருணம்! 

கடற்கரை மணலெங்கும் 
நிலவொளி சிதறிக்கிடக்க ,
கணவருடன் விரல் கோர்த்து 
கால்கடுக்க நடக்கும் தருணம்!

சுட்டெரிக்கும் வெயிலில் 
மட்டையடிக்க பறக்கிற 
மறக்காமல் மகன் தந்த- புழுதி 
மனம் வீசும் ஈரமுத்தம்!

பூச்சரமாய் தந்தைமடி 
துங்கிய மகள்- இன்று 
பூப்பெய்திய காரணத்தால் 
தந்தை முகம் நோக்கி 
தாமரையாய் நாணிச் சிவக்கும் தருணம்!

பள்ளி நண்பனைப் பார்த்து
பழங்கதைகள் தொகுக்கின்ற தருணம்!
இவை மட்டுமா?

அபயம் அளித்திடும் ஆலய மணியோசை 
அழுகை நிறுத்திய குழவியின் சிரிப்பு , 
தரை மெழுகிய , மழை மூடிய 
தலை காட்டும் வானவில் .

வெள்ளிக் காசுகளை அள்ளி
இறைத்தாற் போன்று 
விண்மீன்கள் சுயாட்சி நடத்தும் 
நிலவில்லா இரவு .

தந்திக் கம்பிகளில் 
தலை சாய்ந்து 
எந்த ஊருக்கோ 
சேதி அனுப்பும் குருவிகள்!

பசியோடு பால் அருந்தும் குழவி,
பனி சிந்தும் இளங்காலை, 
பகலில் மழை , 
சுகமான அருவிக் குளியல்!

இவை மட்டுமல்ல . இன்னும் 
எத்தனை ,எத்தனை ,எத்தனையோ!

அழகிய தருணங்கள் நினைப்போம்,
நெஞ்சில் சுமக்கும் 
அழுகிய ரணங்களை மறப்போம்!






BOMMAIGAL!

கால் வயிறு 
கஞ்சிக்காக 
கை பொம்மை 
செய்து வைத்தோம் 

வெயிலில் உருகி நாங்கள் 
செய்த பொம்மை 
விற்கும் முன்னே 
ஆடை மழைதான் வந்ததையா.

கஞ்சிக்காக 
செய்த பொம்மை 
கன மழையில் கரைந்திடுமோ 
என்று 


குடியிருக்கும் கூடாரத்தினுள்ளே
எம் பொம்மைகள் 
கைக் குழந்தையுடன் 
அடைமழையில் 
நாங்கள்!!!



nee!!

இளமையில் கைகோர்த்தேன்
இறுதிவரை துணைவருவாய்.
இன்று உறவானாய்
எல்லாமே நீயானாய்.
எந்தன் சிரிப்பின் பொருளாக
நிறைவாக, பலமாக,
கை நடுங்க
நான் எழுதும்
கடைசி கவிதையிலும்
கடைசி வரியாக!

en magale, sinthanai '91

இங்கே
அறிவியலும், தொழிலும்
அன்றாடம் வளர்க்கப்படும்
ஆனால்,
அனைவர்க்கும் உணவில்லை

பற்பல தொழில்நுட்பம்
பேசப்படும்
ஆனாலும்
படித்தவர்க்கோ வேலையில்லை.

நீதியும், நேர்மையும்
மேடையில் முழங்கப்படும்
ஆனாலும்
ஊழலை, பொய்மையை
ஒழித்திட துணிவில்லை.

அண்டைநாட்டு கலவரங்கள்
இங்கே அலசப்படும்
ஆனாலும்,
நம்நாட்டில் இனக்கலவரங்களை,
சாதிகளை எதிர்த்து அழிக்க இயலவில்லை.

இருந்தாலும்
என் மகளே,
இந்தியாவை நேசிக்க
கற்றுக்கொள்.

இலக்கியத்துடன் நான்
நிறுத்தியதை,
நீ
எழுச்சி பெற்று
இலட்சியமாக்கு!