Thursday, November 28, 2013

மிதிவண்டி ஏறி
இருவரும்
மென் மேகங்களில் மிதந்த
வண்ண நாட்கள்..

நூறுகளில் சம்பளம்
ஆயிரமாய் ஆனந்தம்


வாடகைக் கூடு
வாயிலில்
துடைத்து நிறுத்திய
வனப்பு..!

பெயர் கூட சூட்டினோம்
“ தம்பி”

பைல்கள்,
சாப்பாடு பை , காய்கறி பை
மளிகை கூட அதில்தான்.
பின்னால் நான்

சுமைகள் இருபுறம்...
மிதிக்கிற மன்னருக்கு
சுகமோ சுகம்

அம்மா வீடு , அலுவலகம்
திரையரங்கு, கோவில்
" நகர் வலம் "எல்லாமே
நம் “தம்பி”யுடன் தான்.

பின் சீட்டின்
மென்குரல்
இசை கசிய
தினம் தினம்
இன்ப உலா

நிறைமாத சூலுடன்
நிலைத் தடுமாறி
ஒருநாள் விழும் வரை ..!
மறுநாளில் டிவிஎஸ்

நதியோர சோலை போல
பின்
வசதிகள் வளர்ந்ததன
ஆனால்
வசந்தங்கள் மறப்பதிற்கில்லை
#வரலாறு

புகைப் பட உதவி Duraisamy Panchatcharam

தீபாவளி 2013

உள்ளுணர்வில் மத்தாப்பு 
உயரம் தாவும் 
ஏவுகணை.. ஏற்றங்கள் ..

வண்ணப் பூச்சொரியும் 
வாணங்கள்...நினைவுகள் ..
தரை சுழலும் சக்கரமாய்
விரைகிற கால ஓட்டம்

கணப் பொழுதில்
எழும்பி மறையும்
சிறு நாக கவலைகள் ..

மனம் விட்டு “வெடிச்” சிரிப்பு ..!
தினம்தானே தீபாவளி ??

எளிமையாகவேனும் புதுச் சேலை
ஈரத்துணி பொதிந்த மல்லிகை
இனிப்பெனில் அதிரசம் ...!
இருகரை தொடும் நதியாய்
எல்லையில்லா ஆனந்தம்
இப்படிதான் ...எப்போதும்..!


தலை

தீபாவளி ..!
மகள் ..மருமகன் ,ரியா வந்திட ..
நிறைந்து விட்டது வீடு..

உறவுகள் சேர்ந்து
ஒன்றாய் மகிழ்வதை
கடவுள்கள் காணட்டும்..

முகம் பார்த்துப் பேசுகிறாள் ரியா
விரல் பிடித்து வருவாள் அடுத்த ஆண்டு..!

ஆனந்தம் பொங்கும்
தீபாவளி நல்வாழ்த்துக்கள் ..!
மெல்ல சைக்கிளை 
மிதிக்கும் பெரியவர் – அப்பா 
கையிடுக்கில் தோல்பை – மாமா 
இன் பண்ணிய சட்டை- கோபி மாமா
எப்போதாவது தென்படும் பிரிமியர் பத்மினி- செல்வன்
ஓங்கி ஒலிக்கும் சிரிப்பு – அம்சா அத்தை

ஏதேனும், யாரேனும்
நினைவுக்குள் நகர்த்தி விட
மரித்தவர் மனதில்
உதித்து விடுகிறார்.

வெற்றிலை ,
கோழிக்குழம்பு,
கறை தின்ற காகிதத்தில் கையெழுத்து..
கட்டி வைத்த முல்லை
சிக்கலான மாக்கோலம் ..
சுவாமி புத்தகம் ...

எப்படியும், நினைவில்
மறுபடி பிறக்க வைக்கும்..
மரித்துப் போன உறவுகளை ..!

சிலிர்க்க வைக்கும்
பழம் பாடல் போலே-
மரியா சிவா ( 4-11-2013)

ஒரு துளி தேன் ..
பிரித்தெடுக்க
ஒரு நூறு பூக்களில்
அமர்ந்திருக்குமோ
தேனீ.. ?

வலியும்
சுமையும் இன்றி
வருவதில்லை வெற்றி ..!

மாலை வணக்கம்



ரியா -9௦

இன்றுடன் ரியா மூன்று மாதம் ..

முகம் பார்க்கிறாள் 
விரல்களைத் தொகுத்து வாயில் வைத்து சுவைக்கிறாள்.

எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்கிறாள் ..புரியாத மொழியில் ..!
ஒருபக்கம் திரும்பி துயில் கொள்கிறாள்.

அவள் அம்மாவை தெரிந்து வைத்திருக்கிறாள்.
அதனால் அடம் பண்ணவும் கற்றுக் கொள்கிறாள்
தொடுகை புரிகிறது.

சுவரில் உள்ள நண்பர்கள் மிக்கி, டாலர், ரிச்சி , ஜெனி ,டோரா பார்த்து உரையாடுகிறாள்... ரசிக்கிறாள்.

ஒற்றை விரல் உதட்டில் வைத்து சிந்தனையில் ஆழ்கிறாள் ..!
சப்தமிட்டு சிரிக்கிறாள்,..

ஒரு பூ முகிழ்வது போல் உள்ளது .. மழலை வளர்வது...!
எல்லா கனமான தருணங்களையும்
இலகுவாக்கி விடுகிறது அவளின் இருப்பு.!!
நிழலும் ...உறவும்.


நெஞ்சில் சுமக்கும் 
நல் உறவுகள் 
நிழல்கள் போலே ..

ஒட்டியும் , விலகியும்
அண்மையில் ..
அன்றி தூரத்தில் ..

எண்திசையில்
ஏதோ ஒரு திசையில் ..!

நிழல் நீங்குவதில்லை
விலகுவதில்லை

நெஞ்சில் சுமக்கும் உறவுகள் போல..!

உதடு பிரியா புன்னகை 
உடைந்தாலும் , சரிந்தாலும் 
ஊமை அழுகை ..!

“ யார் , என்ன நினைப்பார் ?”
எப்போதும் மனம் குடையும் ஐயம் ..!

இப்போது
மனம் விட்டு சிரிப்பு
வாய் விட்டு அழுகை ..!

நெகிழ்தலும் ,
மகிழ்தலும்
விரிந்து வளையும்
புதிய மனம்..

உயரே உயரே
பறந்துச் செல்லும்
புதிய நான் .!
# முகநூல் உபயம் ..!

சிலுசிலுக்கும் குளிரில் 
சுகம் தரும்
மென்கதகதப்பாய்..

கடுங்கோடை வெம்மை
கனலென தகிக்கையில்
தரு நிழலாய்..

சில நேரங்களில் மழலையாய் ..
சில கரங்களில் குழவியாய் ...

அன்பு செய்யப் படுதலே
ஆனந்தம் ..!
அன்பு செய்வதோ..
பேரானந்தம் ..!!


மலை முகட்டில் கவிழ்ந்திருக்கும்
பனி அருந்தும்
பறவையாய் 

அலைசுமந்த கடல் தன்னில்
ஆழம் துழாவும்
சிறு மீனாய்

வனச்சரிவில் விளைந்திருக்கும்
மூங்கில் உரசல்களின்
மென் ஓசையாய்

நதிதீரம் குடியிருக்கும்
நாணல்களில் ஒளிந்திருக்கும்
பெயரறியா உயிரினமாய்

உயரே சிணுங்கும்
விண்மீன்கள் தாங்கும்
வெளியிடமாய்

ஏதேனும் ஒன்றாய்...

அன்றி
எல்லாமுமாய்
உரு மாறவே விரும்புகிறேன் ..!

# "அதற்கு"ப் பிறகு ..

Tuesday, October 15, 2013

மண் சொப்புகளும் ..மரப்பாச்சியும்

மண் சொப்புகளும் ..மரப்பாச்சியும் ..!
          
எப்போதும் விளையாட வேண்டும் ..
அலைபேசி , மடிக்கணினி  , வீடியோ
மாற்றி மாற்றி ...

காரோட்டி,
உண்டி வில்லில் பறவை வீழ்த்தி
வெட்டி, சுட்டு, குத்தி
எதிலாவது விளையாட வேண்டும் ..
அவளுக்கு ...

என் தங்கை மகள் ..!

எந்நேரமும் இவைதானா ?
சலித்தவாறே  ?”
தேடித் தேடி வாங்கி தந்தேன்
மண் சொப்புகள் !

விநோதமாய் பார்த்தாள்..
“இவை  வைத்து என்ன செய்ய ?

இரண்டு மண் சொப்பும்
ஒரு மரப்பாச்சியும் போதுமே
மழலை உலகை  மலர்விக்க..!

மண் வீடு கட்டி
கூட்டாஞ் சோறு சமைத்து
பொம்மை கல்யாணம்  செய்து
அது ஒரு தனி உலகு ..!
எழிலழகு

கூழாங்கல்லும்,
புளியங்கொட்டையும்
வைரக்  குவியலான
குழந்தை ராஜ்ஜியம் ..


கண் விரிய நான் சொன்ன
கதைகள்  கேட்டபின் 
கேட்டாள்:
“ உங்க “டேப் “ இல் சார்ஜே இல்லையா
டெம்பிள் ரன் ஆடனும் ..














Sunday, September 8, 2013

பாப்பா யார் போல் இருக்கா ?

விழிகள் இரண்டும் ...அப்பா ..!
நெளியும் சிரிப்பு அம்மா..!
வளையாத நேர்க்கோடு முடி அம்மாவின் அம்மா..!
விரல்களின் நீளம்..  அம்மாவின் அப்பா ..!!
முகவாய் கொஞ்சம்... அப்பாவின் அம்மா  ..!
மென்கன்னங்கள்  அப்பாவின் அப்பாவின் அம்மா .!
யோசிக்கும் தோரணை அப்பாவின் அப்பா..
நாசி சொல்லும் ...அம்மாவின் அப்பாவின் அம்மா..!!
குட்டிப் பாப்பா யார் போல் இருக்கா ?
ஒற்றைவரி கேள்விக்கு எட்டுவித பதில்  ...
எனக்கென்னவோ

பாப்பா பாப்பா போல்தான்  இருக்கா ..!!

Wednesday, August 28, 2013

உஷ் ..



உஷ் .. !
மெல்ல திறங்க..
அறைந்து மூடாதிங்க கதவை.
வாயிற்மணி அடிக்காதிங்க .
சின்னதாய் தட்டுங்க...

உஷ்...!
பாத்திரங்கள் கவனம் ..
நழுவ விடில்
உதறுகிறது உடம்பு ...
அலறுகிறதே தொலைக்காட்சி .
அணைத்தல் உத்தமம் ..

உஷ் ..!
மெல்ல மெல்ல நடங்க ..
மௌனமாய் சிரிங்க ..
சைகையில் பேசுங்க..
( உள் பெட்டிக்கு வருபவரும் ...)

உஷ் ..
ஒலியெழுப்பும் பேப்பர்காரர்
மணியடிக்கும் பால்காரர்
இவர்க்கெல்லாம் புரிய வைத்தல் நலம்

வீட்டின் புது சட்டமெல்லாம்
வீதியிலும் அமலாக்க வேண்டும்
“ உறக்கம் கெடும் அய்யா “ என
விளங்க வைக்க வேண்டும் !!!

#உஷ் பாப்பா தூங்கறாங்க ..!!
(சப்தமின்றி கமென்ட் போடுமாறு
கோரப்படுகிறீர்கள் ..இப்பதான் பாப்பா தூங்கறாங்க ..!)

பாப்பா பிறந்தாள்..

இமை மூடி உறங்குகையில்
இதழோரம் 
முகிழும் குறுஞ்சிரிப்பு..

ஒடுக்கிய சிறு கைகளில் 
ஒளிந்திருக்கும்
ஒய்யார கனவுகள்.

“ஊ” எனக் குவித்து
எதையோ சொல்ல
விழையும் உதட்டு பூக்கள்..

உதைத்துச் சிணுங்கும்
கால்களின் கீழ்
உழலும் நானும், எந்தன் வீடும் ..!

#கொஞ்ச நாளுக்கு பாப்பா தயவில் நிலைத் தகவல்

விடுமுறையில்

ஒருமுறை துவைத்து ..
இருமுறை பெருக்கி , கழுவி

இரவு வந்து
திறந்தாலும் இல்லம் பளிச்சென்று..
(அதுவும் .. பணிப்பெண் கைவண்ணம் !)

பலமுறை பெருக்கி ,
பகலெல்லாம் பாத்திரம் கழுவி

அடுக்களை விட்டு
அகலாத போதும் ...
அடடா வேலை அடுக்கடுக்காய் ...!

# நான்காண்டுக்குப் பின் நீண்ட விடுப்பு ...!
ஆஹா ...அலுவலகப் பணி சுகமானது ..
 — feeling tired.

அன்னைக்கு பிறந்தநாள் வாழ்த்து



பள்ளி இறுதி ஆண்டு படிக்கிறேன் .
ஒரு விடுமுறை தினம் .. 
சர்ச்சிலிருந்து பாதர் அழைப்பதாய் சேதி வந்ததும் ஓடினேன்..

அங்கு அறிமுகப்படுத்தப் பட்டேன் அவருக்கு..
சிவந்த நிறம்.. சற்று குள்ள உருவம்..
கை பிடித்து பேசினார்..கருணை வழியும் , மென்மையான குரல்..!
எங்கள் ஊரில் ஒரு ஆதரவற்றோர் இல்லம் நிறுவ வந்திருப்பதாய் சொன்னார்.

அதற்குள் , ஊர் மக்கள் நிறைய சேர்ந்து விட, அவர்களுக்கு நான் மொழி பெயர்ப்பாளர் ஆனேன். மக்கள் பேச பேச அதை அவரிடம் ஆங்கிலத்தில் சொல்லி, அவர் சொல்வதை மக்களிடம் தமிழில் சொல்லி..

முதல் அறிமுகம் இப்படித்தான்.

அவர் அன்னை திரேசா..

அதன் பின் அங்கு இல்லம் உருவானது.. பிறகு வந்த கன்னியர்களுக்கு தமிழ் கற்கும் வரை , என் மொழி பெயர்ப்பு பணி தொடர்ந்தது..

கல்லூரி காலத்தில் படிப்பு தவிர எனக்கிருந்த ஒரே distraction அந்த இல்லம் தான்..குழநதைகள், முதியோர் என ஆதரவற்ற நெஞ்சங்களிடையே அன்பையும், நேரத்தையும் பகிர்ந்துக் கொண்டேன்.. அப்படியே இருக்கவும் விரும்பினேன்...!

பிரமிக்க வைக்கும் வாழ்க்கை நெறி கண்டு வியந்துப் போனேன்.. நிறைய கற்றும் கொண்டேன்..!

கல்கத்தாவில் இருந்து வரும் கன்னியர் , அன்னையின் வாழ்த்தை எனக்குத் தெரிவிக்கையில் பறப்பது போல் இருக்கும்.

அன்னை வரும் போது அவருடன் அமர்ந்து பேசியுள்ளேன்.

இன்று வாழ்க்கை முறை மாறி விட்டது...! குடும்பம், குழந்தைகள் என ஒரு புள்ளியில் எல்லாமே குவிந்து விட்டது.

ஆனாலும் அன்னையுடனும், அவர் இல்லத்திலும் கழித்த அந்த கணங்களை வாழ்வின் பொன்னான தருணமாய் இன்றும் மனதில் போற்றுகிறேன்..!

எனக்கு அனை திரேசா ஒருமுறை எழுதி தந்த வாசகம்.. “ Love Jesus with undivided Love “

நெஞ்சம் மறப்பதில்லை ..!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்னையே !


மெல்ல வதனம் சுருங்கும் .
மேகப் பஞ்சின் நிறம் மாறும்

விழிகளின் அடியில்
அழையாமல் வரும் கருவளையம் !

குரல் நடுங்க .. நடை குறையும்

முகம் நினவிருக்க
பெயர் மட்டும் மறக்கும்...!

நடுவரி நினைவிருக்க
பாடலின்
முதல்வரி மறக்கும்..!!

அருகே வந்து
முதுமை
கதவைத் திறக்கும்...

பணமோ பாதணியோ
எடுத்திட இயலாது ....

வெற்று கரங்களுடனே
விரைய வேண்டும்.. .
அடுத்த ஊருக்கு ...
# கண்ணாடி சொல்லும் கதை

Sunday, July 21, 2013

இனிய ஞாயிறு

இன்னும் கொஞ்சம் உறக்கம்.
இன்னும் கொஞ்சம் முகநூல் ...
இன்னும் கொஞ்சம் நல்ல சமையல்..
இன்னும் கொஞ்சம் இறை வேண்டல்...

இன்னும் கொஞ்சம் ஒய்வு...
இன்னும் கொஞ்சம் சிரிப்பு ..
இன்னும் கொஞ்சம் இசை..

நாளை ஊறும் புது உணர்வில்
நகர்ந்து விடும் ஒரு வாரம் !

இலக்குகள் இல்லா
இனிய ஞாயிறு வாய்க்கட்டும் .



இறுக்கும் தளைகள்
சற்றே நழுவட்டும்...

இனிய உறக்கம்
இமைகள் தழுவட்டும்..

உழைப்பின் களைப்பு
உடல்தான் மறக்கட்டும்

உணர்வில், உயிரில்- புது
உற்சாகம் பிறக்கட்டும்.

சிறு சிறு மகிழ்வில்
நெகிழும் மழலை போல்
கவலைகள் தொலைத்த
ஞாயிறு
களிப்புடன் சிறக்கட்டும்...!

இனிய காலை வணக்கம்.

கழுவில் ..!

சாதி தனை சாகடித்து
சாதிக்க வேண்டியவர்
பாதியிலே போனதென்ன ?

சந்திக்கு வந்த வழக்கு
முடிவறியாது
சடுதியில் போனதென்ன ?

அழகான வாழ்விருக்கு
அனுபவிக்காது
இங்கு
அழவைத்துப் போனதென்ன?

இன்னும் எத்தனை
இளவரசர்களை
கழுவில் ஏற்றப் போகிறோம்?

மடிக் கணினி

இடைவிடாமல் 
சிணுங்கும் குழவி..
எடுத்தணைக்க நீண்ட கரங்கள்...

கொஞ்ச நேரம் 
கொஞ்சுகையில்
கொதிக்க துவங்கியது அடிமடி..!

# மடிக் கணினி

உறைந்த கணங்கள்..

அற்புதங்களின் கருவூலம்
அன்பும், மகிழ்வும் ததும்பும் 
அழகிய தருணங்கள்....
சுமக்கும் புகைப்படங்கள் 

உறைந்த கணங்கள்
உயிர் பெறுகையில்
கவிதையாய் மனதில் நிறையும்..
கதைகள் நூறு சொல்லும் ..

நினைவைக் கலைக்கும்,
விழிகளில் நீர் சுரக்கும்.

வளர்ந்தபின் மறந்த
மழலைச் சிரிப்பை
மறுபடி திருப்பித் தரும்.

உறவின் மேன்மையை
உரத்துச் சொல்லும் !

ஒரு ஆயிரம் இருக்குமா ?
இருக்கலாம்..

எங்கள்
வாழ்வின் பயணத்தினை
படங்களாய் பதிவு செய்து
பத்திரப் படுத்தயுள்ளோம்
மக்களின் மக்களும் ரசிக்க..!

Sunday, June 16, 2013

தந்தையர் தினம்

என் தந்தையும் .. என் பிள்ளைகளின் தந்தையும்.!

உடுத்தும் வெள்ளை சட்டை ..
உள்ளம் அதனினும் வெண்மை.
கொண்ட செல்வம் ஏதும் இல்லை
எனினும்
கொடுத்து வாழ்ந்த குணம்..!

ஆலயம் , வீடு, கடை தாண்டி
வேறுலகம் கண்டதில்லை.
வறுமையில் செம்மையும்
எளிமையில் நிறைவையும் கண்ட
என் அப்பா அன்பு அப்பா !!

ஆச்சர்யம் ஆனால் உண்மை ..
என் பிள்ளைகளின் அப்பாவும்
என் அப்பாவும் .
ஒரே நூலில் நெய்த உன்னதங்கள் !
உறவுகள் போற்றும் வீட்டுப் பறவை !

கனவிலும் , நனவிலும்
எம்மை
மனதினில் சுமக்கும்
அன்பின் வடிவம்..

சுமைகளை தனக்கென வைத்து
சுகங்களை எமக்கே தரும்
இனிய உள்ளம்.!

நாணம் தடுக்கிறது ...!
என்ன சொல்ல
பெற்ற குழந்தைகள் போல்
நானும் மகளானேன்.!!
..தந்தையர் தின வாழ்த்துக்கள்..

பணி

பறந்துக் கொண்டே பறந்தேன் 
குறையில்லை ..!
கரைந்துக் கொண்டே 
பறக்கையில் 
கரைந்துக் கரைந்து 
புள்ளியானேன்..!

# இன்று பணி அப்படி.!!

இரயில் பயணங்கள் .

இரயில் பயணங்களில்
---------------------------------------
கரித்துகள் துப்பி
புகை கூண்டாய் விரைந்த
""சிக்புக் ...சிக்புக்" ரயில் போயின !

மின்னல் வேக
சதாப்திகள் சகாப்தம்
தூசியில்லா ஏசி பெட்டிகள்..
தும்பைப் பூ போர்வைகளுடன்..!

"நகர்கிற அரண்மனை"கள்
ராஜ கம்பீரத்துடன் ...

வரிசை நின்று
கால் கடுக்க பதிவு போய் .
இணையத்தில்
துண்டு போட்டு
சடுதியில் இடம் பிடிக்கலாம்..

எரிகிற அடுப்புடன்
நிதம் சமையல்....
உணவு வகை .... இரயிலை வீடாக்கும். !


மாறாதது ஒன்றேதான் !
சுவை , குணம் ..தரம் ...
அன்று போல் என்றும்
சாய் ....சாய் ...சாய்..!!!

சிரிப்பு

உன்னத அமைதி சூழல்..
உயிர் உருக்கும் மெல்லிசை.
மெய் மறந்து 
இறை நிலை தொடும் தீவிரம்.

ஆயிரம் பக்தர் கூடிய
தேவாலய கூடம்..

சட்டென்ற “டப்” ஒலியும்
ஒற்றைக் குரல் சிரிப்பும்..

விழிகள் சில திரும்பி
புருவம் நெரிக்க..
கை கொட்டி நகைத்த
சுட்டிப்பயல்..!

நெஞ்சுக்குள் கேட்டதுவோ
மற்றோர் உரத்த சிரிப்பு .
அன்னை கையில் தவழும்
இறைமகன் நகைப்பு

#உடைந்த பலூன்.. குழந்தைகள் குதூகலம்.!

கருணை .

கதையல்ல ..நிஜம்..
ஒரு தவறு ....இரு தண்டனைகள் !!
எங்கள் பள்ளி , கல்வி, கட்டுப்பாடு, ஒழுக்கம் ..எப்போதும் முன்னணியில்...
ஒரு சிறுமி அப்போது வேலூர் சுற்றியிருக்கும் சிற்றூரில் இருந்து படித்தாள்.
5 கி.மீ நடந்து வந்துப் படித்தாள். ஆனால் மிக நன்றாகப் படிப்பாள்.. கவிதை, கட்டுரை போட்டிகளில் பங்கேற்று பரிசு வாங்கி விடுவாள்.

ஒரு நாள் காலை சரியான மழையில் , நனைந்தே வந்து சேர்ந்தாள்..பள்ளிக்கு தாமதம்.

கண்டிப்பிற்கு பெயர் போன H.M சிஸ்டர் பாரபட்சமின்றி ...
..”போய் இண்டர்வல் வரை வகுப்பில் பின்னால் நில்”
சொட்ட சொட்ட நனைந்து , . கைகள் விறைத்து , உடல் நடுங்கி... நின்றுக் கொண்டே ..
இரண்டாவது பீரியட் துவங்கியது.
செல்வராணி டீச்சர் வகுப்பு..முதற் கேள்வி “ ஏன் நிற்கிறாய்?”

விவரம் தெரிந்ததும் கடும் கோபத்துடன் கட்டளை பிறப்பித்தார்.
விடுதிக்கு அனுப்பி , உடை மாற்றி, டீ குடிக்க செய்து அமரவும் வைத்தார்.
சற்று நேரத்தில் வகுப்புக்கு வலம்வந்த H.M சிஸ்டர் கடுமையாய் டீச்சரைக் கண்டித்தார்.எங்கள் கண் முன்.!
கவலையே படவில்லை டீச்சரின் கருணை !


அதே பள்ளி , அதே மாணவி.. வேறு வருடம்.. வேறு HM.
மீண்டும் கால தாமதமாய் ..
இம்முறை தண்டனை “ இதுவரை நடத்தா English Poetry யைப் படித்து ஒப்புவித்து விட்டு செல்.?
அடுத்த நிமிடமே அந்த சிறுமி புத்தகத்தை கொடுத்து ஒப்புவிக்க..
“ வேறேது படிக்கவில்லை சொல்?” என
“ புத்தகம் வாங்கிய உடன் எல்லா English poetry யும் மனப்பாடம் செய்தேன் எதையும் கேளுங்கள்”

“ ஓடு ஓடு.. வகுப்பிற்கு” என்ற HM இடைவேளையில் மீண்டும் அச்சிறுமியை வரவழைத்தார்.
“ ஆங்கில இலக்கியம் எடுத்துப் படி. உனக்கு ஆர்வம் இருக்கிறது..” இது HM..“தமிழ் செய்யுட்களையும் நடத்தும் முன் படித்து வைத்திருக்கேன் “ என்றாள் சிறுமி.

இலக்கியம் படிக்கச் சொன்ன HM யோசனையைப் புறக்கணித்து அச்சிறுமி கணிதம் படித்ததாள். மத்திய அரசுத் துறையில் , கல்லூரி முடித்த சில மாதத்தில் பணி சேர்ந்தாள்.
இன்று இதன் மூலம் தன அனுபவத்தைப் பகிர்ந்துக் கொள்கிறாள்..
# ஆம் ....நான் தான் அச்சிறுமி.. ஒரே தவறுக்கு இருவித தண்டனைகளை பெற்றவள்..

ஆசிரியர் தினம் மட்டுமன்றி ஓவ்வொரு மழைதினமும் செல்வராணி டீச்சரை நினைவுப் படுத்தும்..... குடையும் செருப்பும் இல்லா காலத்தையும்.!
கல்வி மறக்கப் படலாம். !! காட்டப்பட்ட கருணை எப்படி மறக்கப்படும்?
புதிய கல்வியாண்டில் என் நண்பராய் அமைந்த அனைத்து கல்வியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.. கருணையை கை விடாதீர்கள்.!!

ஊருக்குச் சென்ற கணவர்.

அடுப்பில் வழிந்தோடிய பால்..
அவனில் தீய்ந்துப் போன ரொட்டி..!
அவசர மறதியில் 
அணைக்க மறந்த மின்பெட்டி
பொசுக்கிய ஆடை ..!!
ஒலிக்கும் வாயிற்மணிக்கு
ஓடிக் களைத்த கால்கள்...
சாவி தெரியா சங்கடங்கள்.!

சின்னக் நினைவுறுத்தலும்
செல்லக் கோபங்களுமின்றி
வெறுமையாய் கழிந்த காலை!!
# ஊருக்குச் சென்ற கணவர்.

தாள்கள் .

கவிதை முதல் கணினி வரை!
கற்றல் தொடர்கிறது.
கற்றுக் கொள்ளா
கலையும் உண்டு ..காலம் நகர்கிறது.!
செலவழிக்கும் வித்தை !

சிறுதொகை தாண்டி
கைப்பையில் இருப்பதில்லை.
பயணங்களில்
“ எதற்கும் இருக்கட்டும்”என்றே

வற்புறுத்தும் பணத்தை
வாங்கிக் கொள்வேன்
வங்கியின் புதுத் தாளாய்..
பின் செலவழிப்பதுண்டு சிறுபிள்ளையாய்..

புத்தகமாய் , வார இதழாய் ..
குழந்தைகளுக்கு சாக்லேட் !
ஓட்டல் பரிமாறுவோருக்கு..
கார் நிறுத்த காவலாளிக்கு ..

யார் கேட்டாலும் .
மனமுவந்து ..மகிழ்வாய் !
புதிய தாள்கள்.

வயது முதிர்ந்த ஏழ்மை
ஒன்று ரயிலடியில் கை நீட்ட
புதிய பணம் நீட்டினேன்.
உற்றுப் பார்த்து சொன்னார்...
“ எங்கம்மா தந்தது...செலவழிக்காமல்
அம்மா நினைவாய் வைத்துக் கொள்வேன்.”

சற்றே சிலிர்த்தேன்.!
செலவழியாமல் அப்பணம் இருந்தால்...
அவர் நினைவில் நானிருப்பேன்
“ அம்மாவாய்” கொஞ்ச காலம்.!