Friday, May 9, 2014

இப்படியாய் நிகழ்ந்தது ..
-------------------------------------------
அலுவலகத்தில் ஒரு நாள் ..
“மேடம் ஸ்டேப்ளர் பின் இருக்கா ?” புதிதாய் மாற்றலில்
வந்தவர் கேட்கிறார்,
“தேடித் தரேன் ..” என்றேன் .

நிஜமாகவே தேடித்தான் தரனும். டேபிள் டிராயர் அவ்வளவு அடைசல்.

ஒரு வழியாய் குடைந்து , கண்டு பிடித்து தர 15 நிமிடம் ஆனது.
கொஞ்ச நேரம் கழித்து வேறேதோ கேட்க , மீண்டும் போராடி தேடி தந்தேன்.

மறுபடி ஒரு அழைப்பு ... , சிடுசித்து வைத்தேன்.

அடுத்த நாள் காலை ...
அலுவலகம் வந்து அமர்ந்த உடன்
“ உங்க டேபிள் டிராயர் சாவி கீழே இருந்தது’ என்று தந்தார் அதே நபர்.

தலையைப் பின்னால் நானே தட்டிக் கொண்டு திறந்துப் பார்த்தேன்.

அதிர்ந்துப் போனேன்.
மிக சீராக , அழகாய் அடுக்கப்பட்டு இருந்தது.
சின்ன சின்ன பெட்டிகளில் குண்டூசி , ஜெம் கிளிப் , ஸ்டேப்ளர் பின்...
எழுதும் பேனாக்கள், எழுதா பேனாக்கள் பிரிக்கப்பட்டு.
துண்டு சீட்டுகள் அடுக்கப்பட்டு ( சில கவிதைகளும் அடக்கம் )..
கார்பன் காகிதம் ஒரு ஒருகவரில்.
பாக்கெட் சைஸ் பைபிளும் , பாரதியார் கவிதைகளும் ஒருபுறம்..!
நாலணா , எட்டணா நாணயம் கூட ஒரு கண்ணாடி பெட்டியில் ..

ஒரு நன்றி சொல்லவில்லை.
கடுங் கோபத்துடன் முறைத்தேன்.
சிடுசிடுத்தேன் .

இது நடந்து முப்பது வருடமாகி விட்டது..
அந்த நண்பர் இன்னும் அப்படியேதான் இருக்கிறார்.

நான் அவசர அவசரமாய் கலைப்பவற்றை அடுக்கி தந்து கொண்டு ...
என்னுடன் ... என் கணவராக. ...!

அதே பொறுமை, அதே நிதானம், அதே புன்னகை..அதே நட்பு !

அதைவிட ஆயிரமாய் பெருகிய அன்பும், கனிவும்.....காதலும் ..!

முதற்பரிசு கூட நினைவில் இருக்கிறது ..
இவர் திருப்பதி சென்ற போது தேடி வாங்கிய அன்னைமேரி படம் போட்ட சாவி கொத்து. ..!
( அதைக் கொடுத்து விட்டு , திட்டு வாங்கிக் கொண்டார். )

தொன்று தொட்ட காலமாய்
தோற்ற காதல்களைப்
போற்றி விட்டோம் ..!
வென்று விட்ட காதலையும்
யாரேனும் பாடக் கூடும்
என்னைப் போல ..!

வாழ்த்துக்கள் ..
வாழ்த்துங்கள் ..!!

No comments:

Post a Comment