Tuesday, May 20, 2014

அப்போதெல்லாம் ..


அப்போதெல்லாம் ..

வரப்புகளில் கொக்கு
வாய்க்காலின் நண்டு.

நீர்பரப்பில் 
இடை அசைத்து செல்லும்
வாத்து ..

தொழுவத்தில் பசு
தொடும் தூர அணில்.

கழுத்து மணியாட
குதித்தோடும் ஆடு

மூடித் திறந்தவுடன்
தாய் மடி நீங்கி
ஓடப் பார்க்கும்
கோழிக்குஞ்சு

'தோ ட்ருவி "
" இதான் தாக்கா "
"பவ் பவ் நாய்க்குட்டி "
" மியா மியா பூனை "

மகளின் மொழியில்
மழலை பேசி
அழுகை மாற்றிய
அழகிய காலங்கள்
மறைந்தன .. ..

இன்று ..

சுவர்கள் சலித்து,
பொம்மைகள் எறிந்து
வெளியில் செல்ல
எத்தனித்து
சிறுபாதம்
உதைத்தழுதாள் பாப்பா.

வாசலில் நின்றால்
கண்ணுக்கெட்டிய தூரம்
காரும், சைக்கிளும்
தென்பட
உச்சத்தில் சென்ற
அழுகை ..

சட்டென .
அடங்கியது
கைகொட்டி சிரித்தாள்
பாப்பா

சிரம் சாய்த்து
புறம் வந்த
காகம் பார்த்து ..
20-05-2014

1 comment: